அனைவருக்கும் கல்வி: புதிதாக 13,036 ஆசிரியப் பணியிடங்கள்!
சென்னை: பள்ளி கல்வியை மேம்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழும் அரசுப் பள்ளிகளில் 9,471 பட்டதாரி ஆசிரியர்கள், 3,565 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 13,036 ஆசிரியர் பணியிடங்களைத் தோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தமிழத்தில் உள்ள 710 நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், தொடக்கக் கல்வித் துறையில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 1,581 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய 1,282 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆக மொத்தம் 2,863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 75 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
இதேபோன்று 6 முதல் 8 ஆம் வகுப்புகளில் பணிபுரிய 3,565 கூடுதல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 58 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவாகும்.
மேற்கூறிய பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சேர்த்து மொத்தம் 6,428 கூடுதல் பணியிடங்களை தோற்றுவிப்பதற்காக அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தமாக 134 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவாகும்.
No comments:
Post a Comment