Thursday 15 December 2011

TNPSC : எங்கே செல்லும் இந்த பாதை?



தமிழ்நாடு
அரசுப் பணியாளர்
தேர்வாணையம் - 
படித்தவர்களின் 
சூதும் -வாதும்.

                     எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெறவில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடுகளும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது. த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின.  த. அ. ப. தே. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தியது இதுதான் முதல்முறை என்பதால் இந்நடவடிக்கை பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. முறையற்ற வழிகளில் பணம் சம்பாதிக்கத் துடித்த ஆணையத்தின் தலைவர்; உறுப்பினர்கள்; மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையிலான அதிகாரிகள் போன்றோருக்கும் அவர்களது சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளுக்குத் துணைபோனவர்களுக்கும் இது மனக் கலக்கத்தை உண்டுபண்ணியது.

           
    
           சமூகத்தின் வேர்வரை பரவியுள்ள பொருளீட்டும் வெறி, கையூட்டுக் கொடுப்பவர்களையும் வாங்குபவர்களையும் ஒருசேர ஆக்கிரமித்திருப்பதால் இத்தகைய ஊழல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. குழந்தைகளது கல்விக்கான செலவுகளை முதலீடாகப் பார்க்கும் பெற்றோர்கள் ஏதாவது ஒருவகையில் தம் மக்களைச் சமூகத்தின் உயர்தட்டில் அமர்த்த விரும்புகின்றனர். அதற்கான முறையான தகுதி தம் பிள்ளைகளிடம் இல்லாதபோது சமூகத்தில் காணப்படும் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் விழைகின்றனர். இதன் காரணமாகவே வேலைக்கெனப் பணம் கொடுப்பது இவர்களைப் பொறுத்தவரை சமூகக் குற்றமாகத் தென்படாமல் பிள்ளைகளின் நல்வாழ்வுக்கான முயற்சியாகச் சுருங்கிவிடுகிறது. பணம் கொடுக்க இயலாமல் அல்லது விரும்பாமல் திறமையை மட்டுமே நம்பி உழைத்துவருபவர்களது வேலைகளைத் தாங்கள் கைப்பற்றுகிறோம் என்ற குற்றவுணர்வு சிறிதுமற்றுக் குறுகிய மனோபாவம் கொண்டவர்களாக இவர்கள் மாறுகிறார்கள். அழுகிக்கொண்டிருக்கும் சமூகத்தைக் குற்றம்சாட்டும் இந்தப் பெற்றோர்கள் அதற்குத் தாங்களும் ஒரு காரணமாக விளங்குவதை உணரவியலாத அளவுக்குப் புத்திர பாசம் இவர்கள் கண்களை மறைக்கிறது.

                           இத்தகைய பெற்றோரிடம் வகைதொகையின்றிப் பணம் பெற்றுச் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டோர் என நம்பப்படுபவர்களது வீடுகளில்தாம் அன்று சோதனை நடத்தப்பட்டது. உதவிப் பல் மருத்துவர்கள், 2006-2008ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப் 1 அதிகாரிகள் போன்றவர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வுமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் காரணமாக எழுந்த குற்றச்சாட்டையொட்டியே சோதனை நிகழ்த்தப்பட்டிருந்தது. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டோர், உதவிப் பல் மருத்துவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பு அதைப் பார்வையிடக் கோரியுள்ளனர்; 2006-2008ஆம் ஆண்டுகளுக்கான மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கான தேர்வு முறைகளில் ஊழல் புரிந்துள்ளனர்; இவற்றின் மூலம் விதிகளைமீறி முறையற்ற வழிகளில் பொருளாதாரரீதியான பயன்பெற முயன்றுள்ளனர்.

                        துணை ஆட்சியர், காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகளில் நடைபெற்றுவரும் ஊழல்களைத் தடுக்கும்வகையில் தேர்வாணையச் செயலர் த.உதயச்சந்திரன் துணிச்சலுடன் செயல்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்குக் கட்டுப்படாமல், செயலரைச் செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தங்கள் பெயர்களின் பின்னே ரயில் பெட்டிகள்போல் பட்டங்களைச் சுமந்துதிரியும் இவர்கள் அனைவரும் பொறுப்பான உயர்பதவிகளை வகித்துப் பின்னரே தேர்வாணையப் பணிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைக்கும்போது மனத்தில் அச்சமெழுகிறது.

            இந்தச் சோதனையில் கையெழுத்திடப்படாத பணி நியமன உத்தரவு நகல்கள், போட்டித் தேர்வு எழுதியவர்களின் நுழைவுச்சீட்டுகள், பல்வேறு பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல், அரசியல்வாதிகளும் முக்கிய ஆளுமைகளும் வழங்கியிருந்த பரிந்துரைக் கடிதங்கள், கிராம நிர்வாக அலுவலர் தேர்வெழுதியவர்களின் பதிவு எண்கள் கொண்ட பட்டியல், மாணவர்களின் சான்றிதழ்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுகளை எழுதியவர்களின் மதிப்பெண் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், மையிட்டு நிரப்பப்பட்ட விடைத் தாள்கள், புதிய சொத்துகள் வாங்கியதற்கான சான்றுகள் போன்ற அநேக ஆவணங்களும் ரொக்கப் பணம் லட்சக்கணக்கிலும் கைப்பற்றப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற காவல் துறை ஐ. ஜி. துரைராஜின் தம்பியான உறுப்பினர் சண்முகநாதன் வீட்டில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அறத்தைச் சுத்தமாகப் புறக்கணித்துவிட்டுப் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாக நம் சமூகம் மாறிவிட்டதன் அப்பட்டமான சான்று இது.

                       2005இல் தனது பவளவிழாவைக் கொண்டாடிய இந்த ஆணையம் ஊழல்களுக்குப் பேர்போனது. காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வரும்போதெல்லாம் அதை மையமிட்டு அநேக ஊழல் ஊற்றுகள் வெவ் வேறு மட்டங்களில் சுரக்கும். கேள்வித் தாள்களை வழங்குவது, விடைகளைத் தேர்வுக்கு முன்னமே விண்ணப்பதாரர்களுக்கு அறியத் தருவது, நேர்முகத் தேர்வில் அளிக்கப்படும் மதிப்பெண்களைப் பெற்றுத் தருவது, விரும்பிய இடத்திற்கு பணி நியமன உத்தரவை மாற்றித் தருவது என எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கிருந்தெல்லாம் இப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கியுள்ள தலைவரும் உறுப்பினர்களும் பணம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. விதிமுறை மீறலும் அதற்கு நிர்ணயிக்கப்படும் சட்டபூர்வமற்ற கட்டணமும் நேர்விகிதப் பொருத்தமுடையன. தேர்வாணையத்துக்குத் தொடர்பே இல்லாத இடத்தில் ஆட்கள் சந்தித்துச் சங்கேத வார்த்தைகளோடு சட்டபூர்வமற்ற விதத்தில் ஆவணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதாகவும் கதைகள் உலவுகின்றன. எப்படியாவது அரசு வேலையைப் பெற்றுவிட்டால் போதும் எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் நிம்மதியாகக் கழித்துவிடலாம் என்று நினைத்தும் அதற்கான உழைப்பைச் செலுத்தத் தயாராக இல்லாத நடுத்தரவர்க்க விண்ணப்பதாரர்களை இலக்காகக்கொண்டே இந்த முறைகேட்டாளர்கள் செயல்படுகின்றனர். கற்பனைக்கெட்டாத விதத்தில் பல ரூபங்களில் பணி நியமன உத்தரவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெருமளவில் இவர்கள் பொருளாதாரப் பயனடைந்துள்ளனராம். தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பாக இருப்பதால் தங்களைக் கேள்விகேட்க எவருமில்லை என்ற அதீத நம்பிக்கையின்பொருட்டுத் தைரியமாக முறைகேடுகளில் ஈடுபட்டுப் பெருவாரியான தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு ஆனந்த வாழ்வு நடத்திவந்ததாகச் சொல்லப்படும் ஆணைய உறுப்பினர்களுக்கும் தலைவருக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் நல்ல சகுனமாக இருக்கவில்லை.

         தமிழகத்தில் அறிவியல் முறை ஊழலுக்கு வித்திட்டவராக அறியப்பட்டிருக்கும் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும்போது கண்டிப்புடன் நடந்துகொள்ளாமல் தாயுள்ளத்தோடு நடந்து கனிவை வெளிப்படுத்திப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் சுமூகமாகத் தீர்த்துவிடும் சாணக்யர் அவர். தமிழகத்தில் ஊழலை வளர்த்தெடுத்ததில் ஜெயலலிதாவின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல என்பதையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவதையும் மறந்திட இயலாது. என்றாலும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்த அலட்சியப்படுத்தவியலாத குற்றச்சாட்டுகள் அரசின் தலைமைப் பீடத்தில் அழுத்தமாக வைக்கப்பட்டதாலும் இயல்பாகவே அவரிடம் மண்டிக் கிடக்கும் திமுக எதிர்ப்புணர்வின் காரணத்தாலும் அவர் தலைமையிலான தமிழக அரசு இவ்விஷயத்தில் மேம்போக்கான நடை முறையைத் தளர்த்திக்கொண்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு நகர்ந்திருக்கிறது.

                                                  நேர்மையான அதிகாரிகளான த. உதயச்சந்திரனையும் 
வெ. இறையன்புவையும் முறையே தேர்வாணையத்தின் செயலாளராகவும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளராகவும் நியமித்ததைத் தேர்வாணைய முறைகேடுகளுக்கெதிரான அரசின் முதல் நடவடிக்கையெனக் குறிப்பிடலாம். 2011, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அன்று தமிழக அரசு த. அ. ப. தே. தலைவர், உறுப்பினர்களை ஊழல் தடுப்புச் சட்டம்-1988இன் கீழ் ஊழல் தடுப்பு வரம்புக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பித்த செயல் அடுத்த நடவடிக்கை. த.அ.ப.தே. தலைவர், உறுப்பினர்கள்மீது புகாரளிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களை விசாரிப்பதற்கான அதிகாரத்தை இந்த அரசாணை பெற்றுத்தந்தது. தேர்வாணையத்தின் மீதான அரசின் பிடி தொடர்ந்து இறுகிக்கொண்டிருந்ததை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியது. 

                        2011 ஜூலையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வின் விடைத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் அறுநூறு பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்ததாகத் தினத் தந்தியில் வெளியான செய்தி போன்றவற்றின் விளைவாகத் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு குழுவினர் தலைமைச் செயலகத்திற்குச் சென்று தலைமைச் செயலரைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் நடந்தேறிய அதிகளவிலான முறைகேடுகள் மூலமாகத் தகுதியற்ற பலர் தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும் தேர்வு எழுதிய சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்துள்ளனர். தேர்வாணையம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளனைத்தையும் சேகரித்த லஞ்ச ஒழிப்புத் துறை அவற்றை ஒழுங்குபடுத்தித் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர்மீது வழக்குப் பதிவுசெய்ய அனுமதிக்கும்படி அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. இதைப் பரிசீலித்த தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி உடனே அனுமதி வழங்கி முறைப்படியான துறை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே திடீரெனச் சோதனை நடத்தப்பட்டிருந்தாலும் அதற்கான செயல்வடிவம் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுப் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சோதனையில் தேர்வாணையத்தினர் அணிந்திருந்த முகமூடிகள் ஒவ்வொன்றாகக் கழற்றியெறியப்பட்டன.

                        அரசியல்வாதிகள் தலையீடு இருக்கும்பட்சத்தில் பாரபட்சமற்ற நியாயமான அமைப்பாகச் செயல்படுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அதிஜாக்கிரதை உணர்வு காரணமாகவே அரசுப் பணியாளர் தேர்வாணையம், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 316(1) பிரிவின்படி தமிழக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகளோ அறுபத்தியிரண்டு வயதுவரையோ பணியாற்றலாம். இதில் எது முந்துகிறதோ அது வரை அவர்கள் பணி நீடித்திருக்கும். தற்போதைய தலைவரும் உறுப்பினர்களும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலத்தின் கடைசியில் 2011, பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட அரசாணை [நி.ளி (விs)] எண் 29 மூலம் தமிழகத் தலைமைச் செயலர் எஸ். மாலதி பிறப்பித்த உத்தரவின்படி எஸ். பன்னீர்செல்வம், வி. ரத்தினசபாபதி, பி. பெருமாள் சாமி, டி. குப்புசாமி, ஜி. செல்வமணி ஆகியோர் உறுப்பினர் பதவிபெற்றுள்ளனர். ஆர். செல்லமுத்து மு. க. ஸ்டாலினின் சிபாரிசால் தலைவராக்கப்பட்டார் என்கிறார்கள். கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் கிராமப்புற மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்துகொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்த தேர்வாணையத் தலைவர் இன்று தேர்வாணைய ஊழல்களின் பிதா மகனாகக் காட்சியளிப்பது அவலமே.

                   

        தேர்வாணைய உறுப்பினரான வழக்கறிஞர் கே. எம். ரவி 1993இல் பதிவுத் துறை அதிகாரியாகத் திருப்போரூரில் பணிபுரிந்தபோது பத்தாயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதாகியுள்ளார். பின்னர் இவர்மீது சொத்துக் குவிப்பு வழக்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தில் இவர் விடுவிக்கப்பட்டுவிட்டார். அரசு வேலையை உதறிவிட்டே இவர் தேர்வாணைய உறுப்பினராகியுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு யோசிக்கும்போது ஒவ்வொரு உறுப்பினர்களின் தேர்வுகளுக்குப் பின்னணியிலும் என்னென்ன மர்மங்கள் ஒளிந்திருக்குமோ தெரியவில்லை. மராட்டிய மாநிலத் தேர்வாணைய உறுப்பினருக்கெதிரான ஊழல் வழக்கொன்றில், ஜூலை 2007இல் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. கே. பாலசுப்ரமணியம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுகள் தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வுசெய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமென்றும் அப்பழுக்கற்றவர்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்; தேர்வாணையத் தலைவரும் உறுப்பினர்களும் சீஸரின் மனைவி போல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2008இல் நடைபெற்ற ஒரிசா அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் டாக்டர் ஹெச். பி. மிர்தாமீதான வழக்கின் தீர்ப்பில் ஏற்கனவே ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் உறுப்பினராக நியமிக்கக் கூடாதென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நேர்மையான வழியில் தேர்வாணையத்திற்குத் தலைவரும் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிப் பெரும்பாலும் அமையவில்லை என்பதுதான் சோகம்.

  தமிழகத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தேர்வாணையம் இப்படியொரு தலைக்குனிவைச் சந்தித்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது. தமிழக வீட்டுவசதித் துறைச் செயலராகச் செல்லமுத்து பதவி வகித்து வந்த காலத்தில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீட்டில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்னும் கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருவதை இங்கே நினைவுகூர வேண்டியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணை நிறைவுபெறுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகுமென முதலில் கூறப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை தங்கள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையைத் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. எனினும் முப்பது நாட்களைத் தாண்டிய பின்னரும் விசாரணை இன்னும் இறுதிக் கட்டத்தைத் தொடவில்லை என்பதை நவம்பர் 18 அன்று நடத்தப்பட்ட சோதனை பறைசாற்றியது.

                   கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெற்றிருந்த மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிடப்படுவதாக நாளிதழ்களில் முன்னர் குறிப்பிடப்பட்ட நவம்பர் 18 அன்று தேர்வாணைய அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தேர்வாணைய இணைச் செயலர் மைக்கேல் ஜெரால்டு, சார்புச் செயலர்கள், பிரிவு அதிகாரி, உதவிப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் இந்தச் சோதனையில் அடங்குவர். முக்கியமான ஆவணங்கள் சில இதில் சிக்கியுள்ளன. தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களது விவரம், பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை குறித்தும் சோதனை யிட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். முதல்வரும் தலைமைச் செயலரும் தேர்வாணைய முறைகேடுகள் குறித்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்டிவருவதாகச் சொல்கிறார்கள்.

           செல்லமுத்து தலைவராகவும் ஏனைய 13 பேர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டிருக்கும் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் ரத்துசெய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி. எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்புத் துறையின் கண் காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்திருந்த தமிழக அரசாணையை எதிர்த்துச் செல்லமுத்துவும் ஏனைய உறுப்பினர்களும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை புரிந்த நீதிபதிகள், தேர்வாணையம் தொடர்பான அனைத்து வழக்குகளும் தங்களின் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் தலைவர், உறுப்பினர்கள் 13 பேர் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க விரும்புகிறது என்றும் தெரிவித்திருந்தனர்.

          தேர்வாணைய ஊழல் குறித்த விசாரணைகளின் இறுதியில் இவர்களது குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டால், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் பதவி இழக்க நேரிடலாம். தேர்வாணையத் தலைவரையும் உறுப்பினர்களையும் பணிநீக்கம் செய்வதற்குரிய நடைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 317இல் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் அதே சமயம் வேறு எங்கேயும் ஊதியத்திற்காகப் பணியாற்றினாலோ பணியைச் செய்ய முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ முறைகேடுகள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டு அது நிரூபிக்கப்பட்டாலோ தலைவரையும் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் பணிநீக்கம் செய்யலாம். முறைகேட்டில் ஈடுபட்டோரைப் பதவிநீக்கம் செய்யுமாறு மாநில அரசு ஆளுநரிடம் பரிந்துரைக்க, அவர் இந்தப் பிரச்சினையை ஜனாதிபதியிடம் கொண்டுசெல்வார். கவர்னரின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இது குறித்து விசாரணை நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தைக் கோருவார். உச்ச நீதிமன்றம் அளிக்கும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி அனைவரை யும் பதவியை விட்டு நீக்கலாம் என்பதாகச் சட்ட அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

                    2007 ஜனவரியில் ஹரியானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மேஹர் சிங் சைனி, உறுப்பினர்கள் சந்தோஷ் சிங், ராம்குமார் காஷ்யப் ஆகியோரைப் பதவிநீக்கம் செய்து ஹரியானா ஆளுநர் உத்தரவிட்டிருந்ததற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருந்தது. இவர்கள்மீது சாட்டப்பட்டிருந்த ஒன்பது குற்றச்சாட்டுகளில் ஆறு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருந்தன. ஆகவே இவர்களைப் பதவிநீக்கியதற்குச் சட்டபூர்வமான காரணங்கள் உள்ளதாகத் தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம். அதே போல் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஹெச். என். கிருஷ்ணா 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வில் விதிமுறைகளை மீறி முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பதவி நீக்கப்பட்டுக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2011, அக்டோபர் ஏழாம் நாளன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். இதைப் போன்ற முன்னுதாரணங்கள் இருந்தபோதும் இந்த விசாரணையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்குமா என்பதை இப்போது ஊகித்தறிவது கடினம்.

                        வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தச் சூழலில் அவற்றின் போக்கு குறித்துப் பெருமளவில் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் குரூப் 2, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற நடைமுறைகள் நிறைவுபெற்றபோதும் அவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படாதது குறித்த விவாதங்கள் ஊடகங்களில் இடம்பெறவில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அவை வெறும் ஊகத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. பிற மாநிலங்களில் தேர்வாணைய முறைகேட்டுக்கெதிராக நடைபெற்ற வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்களை இணையதளங்களில் காண முடிகிறது. ஆனால் முறைகேட்டாளர்கள் தலைமையின் கீழ்த் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் பற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பது சரிவரத் தெரியவில்லை.

              முறையாகத் தேர்ச்சிபெற்றும் பணி கிடைக்காமல் மன உளைச்சலோடு என்ன நடக்குமோ என்ற பதைபதைப்போடு தேர்வாணைய உத்தரவுகளுக்குக் காத்துக்கிடப்பவர்களது நிலைமை துயரம்மிக்கது. இவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தங்கள் தரப்புக்கு நியாயம் கேட்டதோடு முதல்வரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துத் தங்களுக்குப் பதவி வழங்குமாறு கோரியுள்ளனர். சட்டவிதிகளை மீறிப் பலவித முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் செல்லமுத்து காலகட்டத்தின் அனைத்துப் பணி நியமனங்களையும் ரத்துசெய்துவிட வேண்டுமென்ற கோரிக்கை குறித்து நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும் என்று எழும் குரல் மேலோட்டமான பரிசீலனையின் அடிப்படையில் ஒலிக்கிறது. இப்பிரச்சினை பற்றித் தீவிரமாக ஆலோசித்ததற்குப் பின்னர் அது எழுப்பப்படவில்லை. தேர்வுகளை ரத்துசெய்ய நேரிட்டால் முறையாகத் தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களுக்கு நியாயம் மறுக்கப்பட்டதாகிவிடும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டாலும் நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்னும் சட்ட வழிமுறை நமது நீதியமைப்பில் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில்கொள்க. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை அணுகும் சாத்தியமுமுள்ளது. இத்தகைய பல குழப்ப முடிச்சுகளும் அவிழ்க்கப்படும் காலம் வெகு அருகில் என நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

                 ஊழலற்ற, நேர்மையான, பாரபட்சமற்ற அமைப்பாகத் தேர்வாணையம் செயல்பட்டால் மட்டுமே அதை நம்பிப் போட்டித்தேர்வுகளுக்கெனத் தயாராகும் லட்சக்கணக்கானவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிட்டும். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிடுகின்றன எனும்போது அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை அறிவிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதையும் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படைத் தன்மையைப் பேணாததையும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியதுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வில் மதிப்பெண்கள் அளிக்கப்படுவது முறைகேட்டை மறைமுகமாக ஊக்குவிக்கவே உதவுகிறது. பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் மனநிலை அதற்குகந்ததாக உள்ளதா என்பதை அறிவதற்காக வேண்டுமானால் நேர்முகத் தேர்வு நடத்தப்படலாம். அதற்கு மதிப்பெண்கள் வழங்குவது அறவே ஒழிக்கப்பட வேண்டும். இந்திய ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் முகமாக இந்த நேர்முகத் தேர்வுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுவிட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தங்கள் மதிப்பெண்கள் குறித்த சந்தேகங்கள் எழும்போது தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விடைத்தாளைக் கோரினால் அதன் விவரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுகும் விண்ணப்பதாரர் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டியதும் அவசியம். இத்தகைய முறையான செயல்பாடுகள் பாரபட்சமற்றுப் பின்பற்றப்பட்டால் மட்டுமே தேர்வாணையத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படியான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதில் தேர்வாணையத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் சமூகப் பொறுப்பு மிக்க உதயச்சந்திரன் போன்ற அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் வீணாய்ப்போய்விடும்.

                             ஒருவேளை இந்தத் தேர்வாணையம் கூண்டோடு மாற்றப்பட்டால் அதன்பிறகு நியமிக்கப்படும் தலைவர், உறுப்பினர்கள் தற்போதைய ஆளும் கட்சிசார்ந்த வட்டாரத்திற்கு நெருக்கமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அவர்கள் இன்று புதிதாய்ப் பிறந்தவர்களாக இருக்கப்போவதில்லை. தொடர்ச்சியான தவறுகளும் ஊழல்களும் தொடர்வது மக்களுக்கோ ஜனநாயகத்திற்கோ ஆரோக்கியமானதல்ல. நேர்மையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேர்வாணையச் செயலருக்கும் புதியதாக உருவாகும் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்களுக்கும் இதைப் போன்ற முரண்பாடுகள் எழுந்தால் இப்போது தமிழக அரசு வழங்கிவருவது போன்ற ஒத்துழைப்பைத் தொடர்ந்து அவருக்கு வழங்கித் தனது ஜனநாயகச் செயல்பாட்டை நிரூபிக்க வேண்டும். அதற்கு மாறாகக் கட்சி விசுவாசத்தோடு அரசு நடந்துகொள்ளுமேயானால் நேர்மையான செயலர் மீண்டும் வேறு ஒரு துறைக்கு மாற்றப்படுவார். வழக்கம்போல் தேர்வாணையம் ஊழல் பாதையில் பயணத்தைத் தொடங்கிவிடும்.
-செல்லப்பா

நன்றி , காலச்சுவடு .

1 comment:

  1. நண்பரே, நீங்கள் என்னை போன்று நேர்மையாக இரவு பகல் பாராமல் படித்து, சிறப்பாக தேர்வை எழுதி, அரசு வேலையில் சேர்ந்து மக்களுக்கு நேர்மையான முறையில் சேவை செய்ய காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உதவும் பொருட்டு, எழுதி முடித்த தேர்வுகளை ரத்து செய்யாமல், தவறு செய்தவர்களை மட்டும் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்று தர, நீங்கள் நமது தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை மனுவை அவரின் தனி பிரிவுக்கு அனுப்பலாமே? பரிசீலனை செய்வீர்களா?

    ReplyDelete