- தலைமை நீதிபதி கருத்து
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடு குறித்து அதன் தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சோதனை என்ற பெயரில் தேர்வாணையர் மற்றும் உறுப்பினர்கள் நிர்வாகிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் துன்புறுத்துகின்றனர். நள்ளிரவு வரை சோதனை செய்கின்றனர். எனவே இந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யவேண்டும். சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சங்கரலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் இக்பால், சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தலைமை நீதிபதி இக்பால் கூறும் போது, அரசுக்கும், தேர்வாணையத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சினையால் காலி பணி இடங்கள் நிரப்பபடாத நிலை காணப்படுகிறது. தேர்வானவரும் வேலை நியமனம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதித்துறையிலும், 100-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் நீதித்துறை பணிகளும் தேங்கி கிடக்கின்றன என்று கருத்து தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
6 மணிக்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறையினர் தேர்வாணைய உறுப்பினர்கள், நிர்வாகிகளிடம் விசாரிக்ககூடாது. அவர்களை துன்புறுத்தக்கூடாது. ஜனவரி 5-ந்தேதிக்குள் தேர்வாணைய உறுப்பினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்டுடிஸ்க், சி.டி. ஆவணங்கள் ஆகியவற்றை நகல் எடுத்த பின்னர் அதனை தேர்வாணையத்திடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வார காலத்துக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment